மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்யும் சிலர் தரை தளத்தில், தீ விபத்து போன்ற அவசரகாலத்தில் வெளியேறி செல்லும் பகுதியில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து பஜ்ரங் தள அமைப்பினர் சிலர் வணிக வளாகத்திற்கு வந்தனர். அவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் தொழுகை செய்த நபர்களை வீடியோவாக படம் பிடித்தனர்.
மேலும் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஜனை பாடல்களை பாடி போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வணிக வளாகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அங்கு வந்து இரு தரப்பினரையும் சமாதான படுத்த முயன்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வணிக வளாகத்திற்கு வந்தனர். இதுபற்றி பஜ்ரங் தள அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான தினேஷ் யாதவ் கூறும்போது, கும்பலாக தொழுகை செய்வது நீண்டகாலமாக நடந்து வருகிறது. இதுபற்றி வணிக வளாகத்தில் இருக்கும் மற்ற பணியாளர்கள் எங்களிடம் தகவல் கூறினர்.
வணிக வளாகத்தில் தொழுகை நடத்த அனுமதித்தால், அதன்பிறகு வணிக வளாகத்தின் முன்பு கும்பலாக சேர்ந்து அனுமன் பஜனை பாடல்கள் பாடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி எஸ்.பி. நகர் காவல் நிலைய உயரதிகாரி சுதீர் அர்ஜாரியா கூறும்போது, இதுவரை இரு தரப்பில் இருந்து ஒருவரும் புகார் எதுவும் கொடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், இரு தரப்பினரையும் அழைத்து அவர்களிடம் பேசி, விளக்கம் அளித்துள்ளோம்.
அதன்பிறகு, இந்த விவகாரம் சரி செய்யப்பட்டு விட்டது என கூறியுள்ளார். இந்த சம்பவம் எதிரொலியாக, வணிக வளாகத்தின் நிர்வாகமும், இனி வணிக வளாகத்தில் உள்ளே எந்தவொரு மதம் சார்ந்த செயல்களிலும் ஈடுபட கூடாது என அறிவுறுத்தல்களை பிறப்பிக்க உள்ளது என்றும் சுதீர் கூறினார். சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றில் இதுபோன்றதொரு சம்பவம் நடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.