உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் ருதவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் அங்கித். இரவில், வெளியே போய்விட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இந்நிலையில், அந்த பகுதியில் இருக்கும் கரும்பு தோட்டம் அருகே 18 வயது இளைஞர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் பராஸ் நாத் சவுத்ரி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் ராம்கிருஷ்ணா மிஷ்ரா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடக்க கட்ட விசாரணையில், அங்கித் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. அங்கித்தின் உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவரது வீட்டுக்கு சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அந்த கிராமத்தில் இர்ஷாத் மற்றும் இர்பான் என்பவரின் வீட்டில் அங்கித் டிராக்டர் ஓட்டிவந்துள்ளார். இரவு வீட்டில் இருந்து சென்ற அங்கித்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவர் காவல்துறையினரிடம் கூறினார். அங்கித்தின் சகோதரர் கூறும்போது, இர்ஷாத் மற்றும் இர்பானின் வீட்டுக்கு அங்கித் சென்றார் என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இர்ஷாத் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், அந்த இரவில் இர்ஷாத்தின் சகோதரியும் மர்ம மரணம் அடைந்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவரை புதைத்து இருக்கின்றனர். மேலும் இது ஆணவ கொலை என தெரிய வந்தது. இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது என கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் இருவரையும் கொலை செய்துள்ளனர். பெண்ணின் உடலை புதைத்து விட்டு, இளைஞரின் உடலை கரும்பு தோட்டத்தில் வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என, ஏ.எஸ்.பி. சவுத்ரி கூறியுள்ளார். சம்பவம் பற்றி அறிந்து, சம்பவ இடத்திற்கு கிராமத்தினர் கூடி விட்டனர். பெண்ணின் உடலை தோண்டி எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படும் என ஏ.எஸ்.பி. சவுத்ரி கூறியுள்ளார்.