காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்..
தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்புளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குழந்தைகளிடையே இந்த `ப்ளூ’ வகை காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், இது 3 முதல் 4 நாட்கள் நீடிக்கிறது என்றும் கூறப்படுகிறது… கடுமையான காய்ச்சல், உடல் சில்லிடுதல், அதீத சோர்வு, தலைவலி, உடல்வலி, வறட்டு இருமல், தொண்டைப் புண், வாந்தி மற்றும் அடிவயிற்று வலி உள்ளிட்டவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இருமல் குறைய 2 வாரங்கள் கூட ஆகலாம். குழந்தைகளுக்கு ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து பேசினார்.. அப்போது “ தமிழகத்தில் இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை.. அதே சமயம் வீட்டிலேயே காய்ச்சல் இருந்தால், அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்… இன்புளுயன்ஸா காய்ச்சல் இதுவரை 995 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது..10 பேர் உயிரிழந்துள்ளனர்..” என்று தெரிவித்தார்..
எப்படி தற்காத்து கொள்வது..? ஏற்கெனவே காய்ச்சல் பாதித்த குழந்தை (அ) நபரின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் சளித்துளிகள் காற்றில் பரவி, அடுத்தவருக்கு காய்ச்சல் தொற்றுகிறது. நோயாளிகளின் எச்சில் (அ) சளியை தொட நேர்வதாலும் இது தொற்றலாம். சுத்தமாக கை கழுவுவது, முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இதை தடுக்க உதவும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். மேலும் குழந்தைகளுக்கு அவசியம் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்..