இரவு நேரங்களில் வீடு புகுந்து முட்டி போட்டுக் கொண்டு மர்ம நபர் ஒருவர், அங்கும் இங்குமாக திருட முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவரது வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளான். இந்நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் வழக்கறிஞர் ஆனந்தன் என்பவரின் வீட்டில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவரது வீட்டிலும் நள்ளிரவில் முட்டி போட்டுக் கொண்டு மர்ம நபர் ஒருவர் அங்கும் இங்குமாக திருட முயன்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அங்கு சிசிடிவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக நகரப் பகுதி முழுவதும் 264 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில், இரவு நேரங்களில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பொதுமக்கள் போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
