புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில், அனைத்து துறை தலைவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, நம்மிடம் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். இல்லாத அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளுமாறு தனி சீட்டில் எழுதிக் கொடுக்க வேண்டும்” என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிரபல ஜிப்மர் மருத்துவமனையிலேயே மருந்து தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.