“பாஜக அலுவலகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி எங்கள் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்றிரவு பைக்கில் வந்த இருவர் அப்பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
![அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு..! மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..! அண்ணாமலை](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/871798.jpg)
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் கோவை ஒப்பனக்காரவீதியில் உள்ள துணைக்கடை ஒன்றின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பாஜக அலுவலகம், பாஜக நிர்வாகிகள் வீடுகள் உள்பட 3 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு..! மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..! அண்ணாமலை](https://1newsnation.com/wp-content/uploads/2022/05/Annamalai-1024x576.jpg)
இந்நிலையில், கோவை கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தமிழ்நாடு பாஜக கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.