திமுக எம்பி கனிமொழியை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியினரிடையே வலுப்பெற்று வருகிறது.
திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து, அந்த பதவியை திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர். கட்சி விதிகளின்படி பெண் ஒருவர் துணைப் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும்.

அந்த இடம் தற்போது காலியாக இருப்பதால், கனிமொழியை துணைப் பொதுச்செயலாளராக்க வேண்டும் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக தலைமைக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக மாநிலங்களவை உறுப்பினராக 2007 மற்றும் 2013இல் கனிமொழி தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக மகளிர் அணியின் செயலாளராகவும் அவர் தற்போது பொறுப்பு வகித்து வருகிரார் என்பது குறிப்பிடத்தக்கது.