டெல்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட் – 1 பகுதியில் “கோட்” என்ற தனியார் கேளிக்கை விடுதி இருக்கிறது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு கடந்த 18-ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் ஒரு பெண் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அந்த கேளிக்கை விடுதியில் இருந்த பாதுகாவலர்கள் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பாட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் கேளிக்கை விடுதி செக்யூரிட்டிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது, கேளிக்கை விடுதியின் மேலாளரும், விடுதி செக்யூரிட்டி இரண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணின் ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியில் தகாத முறையில் நடந்து கொண்டுள்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கேளிக்கை விடுதி ஊழியர்கள் தாக்கியதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மனநல பாதிப்புக்கு உள்ளானார் எனவே, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.