சவுக்கு சங்கரை அரசுப் பணியில் இருந்து நிரந்தரமாகநீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துறை உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான நோட்டீசை பெற சவுக்கு சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் , அரசு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2008ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர் , ‘’சவுக்கு ’’ என்ற ஆன்லைன் இணையதளம் தொடங்கினார். அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். இதனால் அவர் இணையதளங்கள் வாயிலாக பிரபலமானார். சமீபகாலங்களில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தபோது அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
இதனால் நீதிமன்றங்கள் சவுக்கு சங்கரின் கருத்துக்களின் அடிப்படையில் , அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கியது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை . இதையடுத்து சவுக்கு சங்கர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2008ம் ஆண்டு அவர்மீது தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரை அரசு அவருக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கி வந்தது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரான அவருக்கு இன்னும் சம்பளம் வழங்கி வருகின்றது. அவரை பணி நீக்கம் செ்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீசை வழங்கினர். இந்த நோட்டீசை சிறை அதிகாரியுடன் சேர்ந்து சவுக்கு சங்கருக்கு வழங்க சென்றபோது அதை அவர் வாங்கவில்லை. இதனால் அவர் தங்கி உள்ள சிறையின் அறை வாசலில் ஒட்டி வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கருக்கு முதற்கட்டமாக ஷோ காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.