அரியலூர் மாவட்டம், ஓரியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவரது மகன் முருகானந்தம் (37). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர் ஒருவரிடம் செல்போன் திருடியதாக இன்று காலை 6 மணியளவில் சமயபுரம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளிகள் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை சமயபுரம் காவல் நிலையத்தில் உள்ள விசாரணை கைதி அறையில் வைத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக முருகானந்தம் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்ற போது முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், லால்குடி உதவி கண்காணிப்பாளர், மணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன், கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் திவ்யா உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை கைதி முருகானந்தம் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்த காவலர் ராம்கியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார்.