நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு-வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 1460 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுபெறக்கூடும். வரும் 25-ம் தேதி வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு சந்திப்பின் இடையில் கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.