மத்தியப்பிரதேசத்தில் மார்க்கெட் ஒன்றில் 2 சிறுவர்கள் பணத்தைத் திருடியதாகக் கூறி லாரியின் பின்புறம் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தூரில் உள்ள சோய்த்ரம் மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை இறக்கும்போது சிறுவர்கள் இருவர் லாரியில் வைத்திருந்த பணத்தை எடுப்பதைப் பார்த்ததாக லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த வியாபாரிகளும், லாரி ஓட்டுநரும் அந்த சிறுவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதன் பிறகு, லாரியின் பின்புறம் சிறுவர்களின் கால்களை கயிற்றில் கட்டி உடல்கள் சாலையில் தேயும்படியாக இழுத்துச்சென்றனர்.
![2 சிறுவர்களை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர்..!! பதைபதைக்கும் வீடியோ காட்சி..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/screenshot56876-1667112192.jpg)
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், இரண்டு சிறுவர்களையும் வியாபாரிகளிடம் இருந்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து, சிறுவர்களை தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்றவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், சிறுவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.