சென்னையில் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரைச் சேர்ந்தவர் பவித்ரா (28). இவர் செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பவித்ரா பெற்றோர் வீட்டில் வசித்து வந்த போது அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி விவகாரத்தான ராஜா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தம்பதி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த ராஜா நள்ளிரவிலேயே பவித்ராவை சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அவர் அலறி கூச்சலிட்டதால் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து பவித்ராவை கொலை செய்துள்ளார். பின்னர், கணவர் ராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது பவித்ரா கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கணவரை தேடி வருகின்றனர்.