சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து, 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயிலானது நேற்று காலை 6.44 மணிக்கு சென்றது. டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்குகள் இல்லாத வெற்று சரக்கு ரயிலின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார். அதனால் ரயிலில் இருந்து 8 பெட்டிகள் தடம் புரண்டு ப்ளாட்பாரமில் இருந்த பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். பலரும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவரவர்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதி வழியாக இயக்கப்படும் 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 20 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.