தலைநகர் சென்னையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருபவர்கள் மீது தற்போது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூளை பகுதியில் சில கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது என்று தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடிப்படையாக வைத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரியான சதீஷ்குமாரின் உத்தரவின் அடிப்படையில், தனிப்படையினர் தொடர்புடைய இடத்திற்கு நேரில் சென்று திடீரென்று கடைகளில் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையில் 3 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அந்த 3 கடைகளும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டது. கடையின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பகுதியில் இருக்கின்ற இதர கடைகளுக்கும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்தால் அது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற தவறான செயல்களில் யாராவது ஈடுபட்டால் அது தொடர்பான தகவல் தெரிந்தவுடன் 9444042322 என்ற கைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் வழங்கலாம். இந்த புகாரினடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் இந்த சோதனைகளை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.