மனைவி அடிக்கடி செல்போனில் பேசியதால், ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை தாலிக்கயிறால் இறுக்கி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் அனபத்தூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது எதிர்வீட்டில் இருந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் கபிலேஷ் என்ற மகன் உள்ள நிலையில், கௌசல்யா மாங்கல் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையே, தனது நண்பர்களுடன் நீண்ட நேரம் போன் பேசி வந்துள்ளார். இதனால் குடிக்கு அடிமையான ரஞ்சித் அடிக்கடி கௌசல்யாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் டிவியை கௌசல்யா மீது தூக்கிப் போட்டு உடைத்ததாகவும், சித்திரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் கௌசல்யா அனக்காவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் ரஞ்சித்தை அழைத்து எச்சரித்து அனுப்பியிருந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கௌசல்யாவின் கழுத்தை தாலிக்கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் ஒன்றரை வயது மகன் கபிலேஷை தூக்கிச் சென்று அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து கௌசல்யாவின் தாய் செல்வராணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை தீவிரமாக தேடி வந்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.