கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே இருக்கின்ற கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (56) கூலி தொழிலாளியான இவருடைய மகள் சுபாஷினி (28) இவருக்கும், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது, மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர்.
இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தான் சுபாஷினி திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த வெற்றி என்பவருடன் சுபாஷினிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. அதோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இதற்கு நடுவே கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சுபாஷினி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக தன்னுடைய கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சுபாஷினி பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிட்டார் என்பதை எப்படியும் அறிந்து கொண்ட வெற்றி, சுபாஷினியின் தந்தை சுப்பிரமணியிடம் தன்னுடைய காதலி எங்கே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் கொண்ட வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில், இது தொடர்பாக புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வெற்றியை கைது செய்தனர். மேலும் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இத்தகைய சூழ்நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆகவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.