ஒசூர் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட தருமபுரி மாவட்ட திட்டப்பகுதிகளில் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை இதுவரை செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீட்டாளர்கள், வட்டித் தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட திட்டப்பகுதிகளில் வீடுகள், மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று நிலுவைத் தொகை செலுத்தாமல் உள்ள தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு அதனை வட்டி தள்ளுபடியில் முழுமையாக செலுத்தி கிரையப்பத்திரம் பெற்றுக்கொள்ள அரசால்
அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஒதுக்கீடு பெற்ற வீடு/மனை அடுக்குமாடி குடியிருப்பிற்கான மாத தவணைக்கான அபராத வட்டியும், விடுபட்ட வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டியும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மேலும் நிலத்திற்கான இறுதி விலை வித்தியாச தொகையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாத வட்டி தள்ளுபடி செய்யப்படும். இச்சலுகையை பயன்படுத்தி ஒசூர் வீட்டு வசதி பிரிவின் தகுதியான ஒதுக்கீடுதாரர்கள் எதிர்வரும் 03.05.2023ஆம் தேதிக்குள் தாங்கள் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையிலுள்ள அசல் தொகைக்கு நடைமுறையிலுள்ள தனி வட்டியுடன் 3 தவணைகளிலும் செலுத்தலாம். மேலும் இச்சலுகை எக்காணத்தைக் கொண்டும் கால நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. இந்த அரசாணை சுயநிதி திட்டம் (ம) தற்காலிக விலை திட்டங்களுக்கு பொருந்தாது.
எனவே அந்த அரசாணையின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம்,அவ்வை நகர், வள்ளுவர் நகர், ஏ.ஜெட்டிஅள்ளி, பாலக்கோடு, அரூர் ஆகிய பகுதிகளுக்கு ஒதுக்கீடு பெற்று நிலுவை தொகையை இதுவரை முழுவதுமாக செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள், இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கிரையப் பத்திரம் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.