பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்கக் கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இக்கூட்டத்தில் பேசிய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, ”ஒன்றிய, நகர கழக நிர்வாக பொறுப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பித்து இருக்கலாம். ஆனால், ஒருவர்தான் பொறுப்பாளராக இருக்க முடியும். பதவி கிடைக்காதவர்கள் பல்வேறு அணிகளில் பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுவார்கள்.

பொறுப்புகள் வேண்டும் என விருப்பப்படக் கூடியவர்கள் மாவட்ட திமுக அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு பதவிகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும். கரூரில் வரும் 16ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்ள இருக்கிறார். கரூர் மாவட்டத்தில் 1047 வாக்குச்சாவடிகளில் பேராசிரியர் அன்பழகன் படம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும். திமுகவில் சாதாரண தொண்டர்களாக இருந்தாலும், அவர்கள் நமது கட்சிக்காகவே பணியாற்றக் கூடியவர்கள். தொண்டர்களையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.

மண்டல நியமன பொறுப்பாளர்கள் 100 வாக்காளர்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும். பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்கக் கூடாது. தொடர் வெற்றிகளை பெற கட்டுப்பாடுகள் மற்றும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். எவ்வாறு நகர்புர உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி பெற்றோமோ அதே போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்” என்றார்.