திருடு போன மாட்டை கண்டுபிடிக்க வாங்கிய லஞ்ச பணத்தை வாயில் போட்டு எஸ்.ஐ. விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பரீதாபா நகரை சேர்ந்தவர் ஷம்புநாத். இவரது எருமை மாடு சமீபத்தில் திருடு போனதால், பரிதாபாத் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ., மகேந்திர உலா, ‘மாட்டை கண்டுபிடிக்க வேண்டுமானால், 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்’ என்று கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் அவரும் சம்மதித்துள்ளார். முதல் தவணையாக ரூ.6 ஆயிரம் கொடுத்தார். மாடு கிடைக்காத நிலையிலும் மீதி ரூ.4 ஆயிரத்தை எஸ்ஐ கேட்டுள்ளார். அப்போது, லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். ஏற்கனவே எஸ்ஐ மகேந்திர உலா மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அதனால், அவரை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று ரசாயன பவுடர் தடவிய பணம் ரூ.4 ஆயிரத்தை கொடுப்பதற்காக ஷம்புநாத் சென்றார்.
சாலையில் வைத்து பணத்தை எஸ்.ஐ. மகேந்திர உலா வாங்கிய போது, மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். தான் மாட்டி கொண்டதை உணர்ந்த அவர், பதற்றத்தில் லஞ்ச பணமான ரூ.4000 அடங்கிய பணக்கட்டை மகேந்திர உலா அப்படியே தனது வாயில் திணித்து விழுங்க முயன்றார். உடனே அவரது தொண்டைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.