ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் ஒலிம்பியன்களுக்கு அவமரியாதை, மேடையில் இடம் கொடுக்காமல் அருகில் அமரவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஜனவரி 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒடிசாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக சாம்பியன் கோப்பை நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று, சென்னை வந்த உலகக் கோப்பை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு காட்சிப்போட்டி நடத்தப்பட்டது.

15-வது உலகக் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, விளையாட்டுத்துறை செயலாளர் அதுல்யா மிஷ்ரா மற்றும் மூத்த அதிகாரிகள், ஹாக்கி உலகக் கோப்பையில் பதக்கம் வென்றவர்கள், ஒலிம்பியன்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது மேடையில் உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களான வி.ஜெ.பிலிப்ஸ், கோவிந்தா, ஃபெர்னாண்டஸ் அகியோருக்கு இடம் வழங்காமல் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே இடம் கொடுத்ததாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாஸ்கரன் அதிருப்தி தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் முறையிட்ட பிறகு மேடையில் முதல் வரிசையில் உலகக் கோப்பை நாயகன்களுக்கும், ஒலிம்பிக் வீரர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது.
பிறகு மேடையில் பேசும் போது உலகக் கோப்பையில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கம் வென்ற எங்கள் மூவரையும் மதிக்கவில்லை எனவும், தமிழ்நாட்டிலே எங்களை மதிக்கவில்லை என்றால் வேறு எங்கு எங்களை மதிப்பார்கள் எனவும் வேதனையடைந்தார். பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசும் போது, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என உறுதியளித்தார்.