கேரள மாநிலத்தில் வீட்டின் முன்பு கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வடசேரிகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டிற்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, குடும்பத்தினரும், அப்பகுதியில் இருந்தவர்களும் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, சங்கீதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும், அங்கிருந்து வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி சங்கீதாவை கொலை செய்த வாலிபர் யார்..? எதற்காக கொலை செய்தார்..? காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.