பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண்களை கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;:2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/-ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்கள் 03.01.2023 முதல் 08.01.2023 வரை குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும்.
பொங்கல் பரிசு நியாயவிலைக்கடை விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
