கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் இளம்பெண்ணின் உடல் ஒன்று கடந்த 3ஆம் தேதி போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த உடல் ஒரு வாரம் காலமாக காணமால் போனதாக கருதப்பட்ட அதே மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான உமா பிரசன்னன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் நாழு என்ற 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கை வந்தவுடன் மேற்கொண்டு விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், போலீசாரிடம் அந்த இளைஞர் கொடுத்த வாக்குமூலம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, உமாவை கொல்லம் கடற்கரையில் கடந்த டிச. 29ஆம் தேதி இளைஞர் சந்தித்துள்ளார். அங்கிருந்து, ரயில்வே துறைக்கு சொந்தமான ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் உடலுறவு வைத்துள்ளனர். உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அந்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இளைஞர் செய்வதறியாமல் திகைத்துள்ளார். தொடர்ந்து, அவசர உதவிக்கு அழைக்காமல் அந்த பெண்ணை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்த இளைஞர், வலிப்பு ஏற்படுவதற்கு முன்பு அந்த பெண்ணின் உடலில் பிளேடால் கீறி காயப்படுத்தியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
கேரள போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போது, கட்டடத்தின் கடைசி அறையில் தரையில் படுத்தவாக்கில் இருந்துள்ளது. அந்த பெண்ணின் தலைக்கு இடதுபுறம் 10 செ.மீ., ஆழத்திற்கு காயம் இருந்துள்ளது. வலது மார்ப்பகத்தின் அடியிலும் காயம் இருந்துள்ளது. உடல் கிடந்த தரையில் ரத்தம் உறைந்த நிலையில் இருந்துள்ளது. கட்டடத்திற்கு அருகே வசிப்பவர்களுக்கு துர்நாற்றம் வருவதை அறிந்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரிலேயே பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூராய்வுக்கு பின் உமாவின் உடலுக்கு இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட்டது. அந்த பெண்ணின் கணவர் பிஜூ கடந்த 2014ஆம் ஆண்டு காலமானார். அவர்களுக்கு 7 வயதிலும், 3 வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். உமா கடைசியாக தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். அதற்கு முன் அவர் லாட்டரி விற்று வந்துள்ளார்.
கடந்த டிச. 29ஆம் தேதி தனது பெண்ணை காணவில்லை என உமாவின் தாயார் போலீசாரிடம் அப்போதே புகார் கொடுத்துள்ளார். வேலைக்கு சென்று பின் வீடு திரும்பாத மகளை தொடர்பு கொண்டபோது, போன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. அப்போது, டிச. 31ஆம் தேதி கோட்டயம் சந்திப்பில் போலீசார் குற்றவாளி நாழுவிடம் இருந்து மொபைல் போனை கைப்பற்றியுள்ளனர். ஆனால், அப்போது நாழுவை போலீசார் கைது செய்யவில்லை. அந்த போனை கடற்கரையில் கண்டெடுத்ததாகவும், போனின் உரிமையாளரிடம் கொடுக்கவே அதை எடுத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதை நம்பிய போலீசார் அவரின் விவரங்களை மட்டும் சேகரித்துவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின்னர், பெண்ணின் உடல் கைப்பற்ற பின்னர்தான் நாழுவை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.