டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (Self Study Groups) மூலம் TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க, DEPARTMENT OF EMPLOYMENT AND TRAINING FACULTY REGISTRATION FORM என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பப் படிவத்தை வரும் 10ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விவரங்களுக்கு 044-22501006/22501002 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில், கல்வித் தகுதி, போட்டித் தேர்வுகளில் உள்ள முன்அனுபவம், தற்போதைய பணி நிலவரம், எடுக்க விரும்பும் பாடங்கள் ஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும்.
முன்னாள் தேர்வர்களுக்கு சூப்பரான வாய்ப்பு…
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்த ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டது. அந்த திட்டத்தில், குரூப் 2/2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. மேலும், குரூப்-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2023 நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்றும், அதற்கான தேர்வு 2024இல் தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுத் திட்டம், தேர்வர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. எனினும், எதிர்வரும் போட்டித் தேர்வுகளுக்கு நீங்கள் தயார் செய்து கொண்டு வருபவராக இருந்தால், இந்த பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளத்துடன் நீங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தொடர்ந்து தயார் செய்ய இந்த பணி வழிவகுக்கும்.