கொரோனா காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட இலவச ரேஷன் திட்டத்தை மத்திய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், பயனாளிகளுக்கு உரிய அளவு ரேஷன் கிடைப்பது அவசியம் ஆகும். இதற்கென ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆப் சேல் (இபிஓஎஸ்) கருவிகளை இணைக்கும் விதமாக உணவு பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்த பின், ரேஷன் எடையில் ஏற்படக்கூடிய குளறுபடிகள் குறைய வாய்ப்பு உள்ளது.

பொது விநியோக திட்டத்தின் (பிடிஎஸ்) பயனாளிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் கிடைக்காமல் இருக்க, ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் ஆப்லைனிலும் ஆன்லைன் பயன் முறையிலும் வேலை செய்யும். அதோடு இந்தியாவில் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள இயலும்.