பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26ஆம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கை அருகே ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்த பன்னாட்டு நிறுவனம் அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுக்கு தடை விதித்துள்ளதாக அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பிரச்சனையை முறையாக கையாளவில்லை என்று கூறி ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு அளித்துள்ளது. அநாகரிக நிகழ்வு நடந்தபோது விமானத்தை இயக்கிய விமானியின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதத்துக்கு ரத்து செய்தும் உத்தரவு அளித்துள்ளனர். விமான சேவை பிரிவு இயக்குனருக்கும் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.