’குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக விஜய் டிவி ரசிகர்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும் பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பட வாய்ப்புகளை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கையில், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்களோ, அதை போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருப்பார்கள். ரக்ஷன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இந்நிலையில், கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த பாலா, புகழ், சிவாங்கி ஆகியோர் தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்து பிஸியாக நடித்து வருவதால், அவர்கள் மூவரும் பங்கேற்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும், புதிய கோமாளிகளாக பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா, சுனிதா, மணிமேகலை உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர். குக்குகளாக தொகுப்பாளினி அர்ச்சனா, பிக்பாஸ் பிரபலம் தாமரைச் செல்வி, நடிகை வாசுகி, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, அகத்தியன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.