திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழக இளைஞர்களை வட மாநில தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டியதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வடமாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பிழைப்பிற்காகத் தமிழ்நாடு வருவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இருந்த போதிலும் ஹோட்டல், கட்டிட வேலை தொடங்கிப் பல பணிகளுக்கு வடமாநில தொழிலாளர்களின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் வட மாநிலத்தவர் வந்து கொண்டே இருக்கிறார்கள். வடமாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு, சம்பளம் அதிகம். இதனால், வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படி வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் இளைஞர்கள் குறித்து முறையான டேட்டா இல்லாததால் இதைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இதற்கிடையே திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நடந்த சம்பவம் என்று கூறி இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அங்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் தேதி திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் நடந்துள்ளது. அன்றைய தினம் அங்குள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் டீ குடிக்க அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களில் சிலர் பெட்டிக்கடையில் புகைப்பிடித்ததுள்ளனர். அப்போது அங்கு 4 தமிழக இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது வடமாநில இளைஞர் தன் மீது வேண்டுமென்ற சிகரெட் புகையை விட்டதாகத் தமிழக இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
மேலும், வடமாநில தொழிலாளி ஒருவரை மதுபோதையில் இருந்த தமிழக இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கு பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற வடமாநில தொழிலாளர்களை இதைப் பார்த்தும் தமிழக இளைஞர்களை நோக்கி ஓடி வந்துள்ளனர். அத்தனை பேர் திடீரென வருவதைக் கண்டு தமிழக இளைஞர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். அன்றைய தினம் இது தான் நடந்துள்ளது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் சம்பவ வந்துள்ளனர். போலீசார் வருவதைப் பார்த்தும் தமிழக இளைஞர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதேபோல வடமாநில இளைஞர்களும் போலீசாரை கண்டதும் அமைதியாக பணிக்குத் திரும்பியுள்ளனர். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்பதால் போலீசாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்த போது, அங்கிருந்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அதுதான் வைரலாகி வருகிறது.