அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டுவந்து அம்மாநில அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ வழக்கு பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என அசாம் அமைச்சரவை முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளது.
![”இந்த வயசுக்குள்ள குழந்தை பெத்துக்கணும்”..!! முதல்வரின் பேச்சால் வெடித்தது சர்ச்சை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-29-at-1.08.28-PM1-e1674977970741.jpeg)
இந்நிலையில், கவுஹாத்தியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஹிந்தா பிஸ்வாஸ் சர்மா, “18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடப்பதை குறைத்து தடுக்கவே அரசு கறாரான சட்டங்களை இயற்றி வருகிறது. எப்படி, சிறு வயதில் கருதரிப்பது கேடான விஷயமோ, அதேபோல வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வதும் உகந்த செயல் அல்ல. அனைத்து விஷயங்களையும் ஒரு குறிப்பிட்ட வயதில் செய்ய வேண்டிய விதத்தில் தான் கடவுள் நமது உடலை படைத்துள்ளார்.
எனவே, 22 வயதில் இருந்து 30 வயது காலகட்டத்தில் பெண்கள் தாய்மை அடைய வேண்டும். இந்த வயதில் இருக்கும் பெண்கள் திருமணமாகாமல் இருந்தால் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்றார். முதலமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையான நிலையில், சமூக, பெண்ணிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருமணம் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை எனவும், இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பெற வேண்டும் என்று பேசுவது முதலமைச்சரின் வேலையல்ல என விமர்சித்து வருகின்றனர்.