தர்மபுரி அருகே 17 வயதுடைய பெண்ணை கடத்திய 55 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் தாசரவல்லி பகுதியைச் சார்ந்த 17 வயது இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென இவர் வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர்கள் எங்கு தேடியும் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இவர்களது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியது. காவல்துறையின் தீவிரமான விசாரணையில் அந்தப் பெண்ணின் பெரியப்பா முறை உறவினரான முருகன் என்ற 55 வயது நபர் ஆசை வார்த்தைகளை கூறி இளம் பெண்ணை கடத்திச்சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறை அந்தப் பெண்ணை அவரிடம் இருந்து மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் முருகனை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர். மேலும் கடத்தலின் உண்மையான நோக்கம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறது காவல்துறை.