கடந்த 2008இல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் வேளாண் அல்லாத துறைகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, தமிழ்நாட்டில் 28,789 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.50 லட்சமும், சேவை சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.20 லட்சமும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற எந்தவித கல்வித் தகுதியும் தேவை இல்லை. இருப்பினும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய உற்பத்தித் திட்டங்கள் மற்றும் ரூ.5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்ட மதிப்புடைய சேவைத் திட்டங்கள் முன்னெடுப்போர் குறைந்த பட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மானியமாக ஓபிசி/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள்/சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு ஒட்டுமொத்த திட்டத் தொகையில் 25% (நகர்ப்புறங்களுக்கு), 35% (கிராம புறங்களுக்கு) வழங்கப்படும். அதவாது, ரூ.50 லட்சம் திட்டம் மதிப்பீட்டில், கிட்டத்தட்ட ரூ.17.5 லட்சம் னியமாக அரசு செலுத்தும், இதர தொகையை வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தொழில் முனைவோர் தங்கள் பங்களிப்பு நிதியாக வெறும் 5% நிதி அளித்தால் போதும். பொதுப் பிரிவினருக்கு இது 10% ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறையின் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு அடமானம் தேவையில்லை. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் kviconline.gov.in/pmegpeportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, நேரடியாக பரிசீலனை செய்து அவற்றை கடன் வழங்கும் முடிவுகள் எடுப்பதற்காக, நேரடியாக வங்கிகளுக்கு அனுப்பப்படும். இணையதளத்தில் மானியம் கோருவதற்கு முன்பாக, விண்ணப்பதாரர்கள் தொழில் முனைவோர் மேம்பாடு நடத்தும் 5 நாள் தொழில் முனைவோர் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.