கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி இரவு விடுதி அறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி, பல அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்தியது. அதில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, லிங்கசுகுர் போலீசார் தற்கொலை வழக்கை மாற்றி கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்த கல்லூரியின் முதல்வராக இருக்கும் ரமேஷ் தான் அந்த விடுதியின் வார்டனாகவும் இருந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், ரமேஷ் அந்த மாணவியை மிரட்டி வந்துள்ளார். கல்லூரி முதல்வரின் தொடர் அத்துமீறலால் அந்த மாணவி இரண்டாம் ஆண்டு படிப்பை வேறு கல்லூரியில் தொடர முடிவு செய்தார். இந்நிலையில், சம்பவத்தன்று கல்லூரி முதல்வர் ரமேஷ், அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இது பற்றி வெளியே தெரியாமல் இருப்பதற்காக மாணவியைக் கொலை செய்து உடலை அவரது அறையில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரமேஷை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.