தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதன் படி, அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து சிவாலயங்களிலும் வரும் 18-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும், நமது பாரம்பரிய, கலை, கலாசார மற்றும் ஆன்மிக – சமய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மகா சிவராத்திரி கொண்டாடப்படும் திருக்கோயில்களில் குறிப்பாக கோபுரங்கள், மதிற்சுவர்கள் போன்றவற்றில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின் அலங்காரங்கள் செய்யப்பட வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத்தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகன நிறுத்தம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
பல்வேறு துறைகளின் அலுவலர்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மகா சிவராத்திரி திருவிழாவினை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்களும், சேவார்த்திகளும் கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மேற்படி நிகழ்ச்சிகள் அந்தந்த திருக்கோயிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் நடத்தப்பட வேண்டும். கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்பொழுது, அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் அனைத்தும் கரோனா நோய் தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.
