இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு ஏதுவாக அமைந்தது. இதில் அஸ்வின், ஜடேஜாவின் சுழல் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 91 ரன்னிலும் சுருண்டது. முதல் இன்னிங்சில் கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் மற்றும் ஜடேஜா, அக்ஷர் பட்டேலின் அரைசதத்தால் 400 ரன்களை இந்தியா குவித்தது. இதனால் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி போன்றே இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்தும் வேட்கையுடன் இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். எஞ்சிய 3 டெஸ்டுகளில் குறைந்தது இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். அத்துடன் டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடிக்க முடியும். அதனால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி இந்தியாவுக்கு மிகவும் அவசியமாகும்.