கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமனில் வாகலாண்ட் எனும் பெயரில் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்நிலையில், சுற்றுலா வந்த மாணவர்கள் சிலர் இந்த ஓட்டலில் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் காலை உணவாக முட்டை மசாலாவும், தோசையும் ஆர்டர் செய்திருந்தனர். இதில் இரண்டு மாணவர்களின் முட்டையில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல, சில மாணவர்கள் இந்த மசாலாவை சாப்பிட்டு விட்டு, மயங்கி விழுந்தனர். இதனையடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்ற மாணவர்கள் ஓட்டல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, அந்த அதிகாரிகள் மாணவர்கள் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகளும் விரைந்து சோதனை செய்தனர். சோதனையில், ஏற்கனவே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஓட்டல் ஏற்கெனவே இதே போன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருந்த நிலையில், இரண்டு முறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் இதே போன்ற சம்பவத்தில் ஓட்டல் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில், அம்மாநிலத்தில் உணவு பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.