கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (24). இவர், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கௌசல்யாவின் காதல் விவகாரத்தை இவரது உறவினரான எம்பிபிஎஸ் மாணவி, கௌசல்யாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌசல்யா, போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, எம்பிபிஎஸ் மாணவியின் காதலனிடம், தான் எம்பிபிஎஸ் மாணவியின் முன்னாள் காதலன் என்று கூறி அவரிடம் பேசியிருக்கிறார். தொண்டாமுத்தூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக கௌசல்யா பேசியிருக்கிறார். இறுதியில் பாலகிருஷ்ணனிடம் இருந்த அந்தரங்க புகைப்படங்களை கௌசல்யா பெற்றிருக்கிறார். இதையடுத்து, மற்றொரு இன்ஸ்டா கணக்கு தொடங்கி அதில், மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவ மாணவியின் நண்பர்கள் மூலம் இதனை அறிந்த மாணவி, தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றம் செய்த கௌசல்யாவையும், மருத்துவ மாணவியின் காதலன் பாலகிருஷ்ணனையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரையும் விசாரிக்கையில் கௌசல்யா விரோதம் காரணமாகவே இதனை செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.