ஒடிசா மாநிலத்தில் ஆம்புலன்ஸில் வைத்து கஞ்சா கடத்த முயன்ற கும்பலை அம்மாநில போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அந்த கும்பலிடமிருந்து 420 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதன் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவ்வாகனத்தில் இருந்து 420 பாக்கெட்களை கைப்பற்றினர். ஒரு பாக்கெட்டுகளுக்கு ஒரு கிலோ விதம் 420 kg கஞ்சா அந்த வண்டியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 40 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சை ஒட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்ததில் அந்த நபர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சார்ந்த உபேந்திரா சாகு என்பது தெரியவந்தது. மேலும் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்தக் கடத்தலுக்கு பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் இவர்கள் ஏதேனும் குழுக்களாக செயல்படுகிறார்களா என்ற ரீதியில் காவல்துறையினர் பிடிபட்ட ஓட்டுநரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.̓