பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி தாளாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக குதுப்புன் நஜிப் (47) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளை அடிக்கடி தொட்டு பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவிகள் புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு குதுப்புன் நஜிப் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மாணவிகள் புகார் அளித்தும் சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற குற்றத்திற்காக பள்ளி தலைமை ஆசிரியை காதரம்மாள், தாளாளரின் மனைவி முகமது பாத்திமா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். குதுப்புன் நஜீப் பாலியல் வழக்கில் சிக்கியதால் அவர் தாளாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதுப்புன் நஜீப்பை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் பரிந்துரையை ஏற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.