வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இருவரும் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இளையராஜாவும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேச வரும்போது, வெற்றிமாறனிடம் மைக்கை கொடுத்து, முதலில் நீ என்னுடன் பணியாற்றிய அனுபவத்தை பற்றி கூறு என சொன்னார். இதையடுத்து பேசிய வெற்றிமாறன், “விடுதலை படத்துடைய தொடக்கம் ராஜா சார் தான். அவரை முதலில் சந்தித்தபோது கதை சொல்ல சொன்னார். நான் படம் எடுத்துட்டு வந்து காட்டட்டுமானு கேட்டேன். அதற்கும் ஓகே சொன்னார். ஒரு 45 நிமிடம் படத்தை முதலில் காண்பித்தேன். அந்த காட்சிகளை பார்த்த பின்னர் உருவான பாடல் தான் வழிநெடுக காட்டுமல்லி பாட்டு. இந்த பாட்டை நானே எழுதுறேன்னு அவரே விருப்பப்பட்டு லிரிக்ஸும் எழுதினார். இந்த படத்தில் ராஜா சார் அருகில் இருந்து பணிபுரிந்தது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன்” என கூறினார்.
இதையடுத்து பேசிய இளையராஜா, இந்தப் படம் இதுவரை திரையுலகம் சந்திக்காத ஒரு களத்தில் நடக்கின்ற படமாக இருக்கும். தமிழ் திரையுலகிற்கு இவர் ஒரு முக்கியமான டைரக்டர். 1500 படம் பண்ணியதற்கு அப்புறமா நான் இதை சொல்லுகிறேன் என்றால் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 1500 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன். ஏராளமான இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். விடுதலை படத்தில் பணியாற்றிய அனுபவத்தில் சொல்கிறேன், வெற்றிமாறன் திரையுலகிற்கு கிடைத்த ஒரு நல்ல இயக்குனர். இந்த படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள் என இளையராஜா சொன்னதும் ரசிகர்கள் கத்தி கூச்சல் போட தொடங்கினர்.
இதனால் கடுப்பான இளையராஜா, கத்தாத நான் மைக்-அ கொடுத்துட்டு போய்கிட்டே இருப்பேன் என சொன்னதும் ரசிகர்கள் கத்துவதை நிறுத்தினர். இதையடுத்து வழிநெடுக காட்டுமல்லி பாடலின் இருவரிகளை பாடிய பின்னர் நன்றி கூறி தனது உரையை முடித்துக்கொண்டு கிளம்பினார் இளையராஜா.