சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மாநிலச் செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்தல், அதிமுக புதிய உறுப்பினர் அட்டை விநியோகம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள், இடைத்தேர்தல் பின்னடைவு, பாஜக-அதிமுக பிரச்சனை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார் என அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.