வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யான வதந்தி பரவி வந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றும் செங்கல் சூளைகளில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்..
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு வதந்தியில் பரப்பப்பட்டது. இதனால் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் அவர்கள் பணிபுரியும் மற்றும் தங்கி இருக்கும் பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கின்ற செங்கல் சூளைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை ராமநாதபுரம் சரக டிஐஜி துரை மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாக கேட்டறிந்தனர்.
அத்துடன் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா? பணிகள் எப்படி இருக்கிறது? உணவுகள் சரியாக கிடைக்கின்றதா? என்பது தொடர்பாகவும் நேரடியாக அவர்களிடம் கேட்டறிந்தனர்.
அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வட மாநில தொழிலாளர்கள் நாங்கள் மகிழ்ச்சியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறோம். எனவும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கே தெரிகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.