தேர்வு எழுத வந்த மாணவிக்கு தேர்வு அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பிளஸ் ஒன் பொதுத் தேர்வுகள் புதன் கிழமை தொடங்கி தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 13,114 பேர் பிளஸ் 1 பொது தேர்வு எழுதினர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தில் பொதுத்தேர்வு எழுதுவதற்காக உசரவாக்கம் பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவி வந்திருக்கிறார். அவருக்கென தேர்வு மையத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
அவருக்கு தேர்வு கண்காணிப்பாளராக ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மாணவி தேர்வு எழுதும் போது அவருக்கு உதவி செய்வது போல் ஆசிரியர் ஜெகன்நாத் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. தேர்வு முடிந்ததும் தனது வீட்டிற்கு சென்ற மாணவி இது தொடர்பாக தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்தப் புகாரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர் . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த மாணவி மற்றும் ஆசிரியர் ஜெகன்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறையின் விசாரணையில் ஆசிரியர் ஜெகன்நாத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபணம் ஆனது. இதனை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தேர்வு அறையிலேயே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஆசிரியர் ஈடுபட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.