உத்தரப்பிரதேச மாநிலம் உசேன்கஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த சிறுமிகளான அக்கா, தங்கை இருவரும் பக்கத்து ஊரில் நடைபெற்ற திருவிழாவை பார்க்கச் சென்றுள்ளனர். பின்னர், திருவிழாவை பார்த்து விட்டு இரவோடு இரவாக வீடு திரும்பியுள்ளனர். வழியில் அவர்களை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவர்களை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இருவரையும் கடத்திச் சென்றனர். பின்னர், அங்கு வைத்து சிறுமிகள் இருவரையும் அந்த கும்பல், மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது சிறுமிகள் இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனாலும், பொதுமக்கள் அவர்களில் 6 பேரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் 6 பேரையும் கைது செய்தனர். கைதான 6 பேரும் 22 வயதில் இருந்து 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. தலைமறைவான அவர்களது நண்பர்கள் இருவரை வலைவீசி தேடி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சகோதரிகள் இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் வழக்கில் சிக்கிய கும்பல் சம்பவம் நடப்பதற்கு முன்பு திருவிழா பார்க்கச் சென்ற சகோதரிகளிடம் அத்துமீறியதும், அவர்களிடம் இருந்து செல்போனை பறித்ததும் தெரியவந்தது. அதன் பிறகு தான் அவர்கள் பின் தொடர்ந்து சென்று இந்த கொடூரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.