பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற புது மாப்பிள்ளை உடலில் பல்வேறு பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாவட்டம் சீதாமார்க்கி நகரைச் சார்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிந்து திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வந்தது. மேலும் அவரது குடும்பத்தினரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் அந்தப் பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் அவரது உடல் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வெட்டு காயங்கள் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிரமான விசாரணையிலும் இறங்கியது காவல்துறை. இந்த விசாரணையில் கடந்த மார்ச் எட்டாம் தேதி அன்று நடைபெற்ற ஹோலி பண்டிகையின் போது சிந்துவிற்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞரான மகேதா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருவேளை அந்த தகராறு காரணமாக மகேதா சிந்துவை கொலை செய்திருப்பாரா? என்ற கோணத்தில் அவரை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்செய்யும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.