கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். பெலகாவி நகரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமாக வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

தேசிய அளவில் அதிகம் ஊழல் புரியும் அரசாக கர்நாடக பாஜக அரசு இருப்பதாகவும் 40% கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் கூறியதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டினார். காவல்துறை தேர்வில் முறைகேடு, துணை பேராசிரியர்கள் தேர்வில் முறைகேடு, துணை பொறியாளர் தேர்வில் முறைகேடு என்று பாஜக அரசு மீதான முறைகேடுகளை பட்டியலிட்டார். அண்மையில் பாஜக எம்எல்ஏ ஒருவரின் மகன் கமிஷன் தொகை வாங்கியபோது பிடிப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பேசிய ராகுல் காந்தி, ”எத்தனையோ பேர்.. பிரதமர், பாஜக, ஆர்.எஸ்.எஸ், போலீஸ்., ஆகியோரைப் பார்த்து பயப்படலாம். ஆனால், நான் சிறிது கூட பயப்பட மாட்டேன். நான் எவ்வளவு தாக்கப்பட்டாலும், என் வீட்டுக்கு எத்தனை தடவை போலீஸ் அனுப்பப்பட்டாலும், எனக்கு பயம் கிடையாது. என்னை அச்சுறுத்த முடியாது. நான் உண்மையின் பக்கம் நிற்பேன்” என்றார்.