டெல்லியில் அறிவிக்கப்பட்ட 78,800 கோடி பட்ஜெட்டில், கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கல்வித் துறைக்கு சுமார் ரூ.16,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், சில காரணங்களுக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பட்ஜெட்டை நிறுத்தி வைக்கும்படி டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்தார்.
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசின் பட்ஜெட்டில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பியது, பிறகு விளக்கங்கள் தொடர்பாக பட்ஜெட்டை மீண்டும் சமர்ப்பிக்குமாறு கெஜ்ரிவால் அரசாங்கத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் கைலாஷ் கெலோட் தனது உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார்.
அதன்படி, மொத்தமாக அறிவிக்கப்பட்ட 78,800 கோடி பட்ஜெட்டில், கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கல்வித் துறைக்கு சுமார் ரூ.16,500 கோடி ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டு கல்வி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை விட ₹200 கோடி அதிகமாகும். மேலும் 350 அரசுப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகள் வழங்கப்படும் என்றும், ஆசிரியர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்றும் டெல்லி அரசு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தது.