விநாயக் என்பவர் ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் உள்ள இன்ஸ்பயர் வெப்ஸ் என்ற இணையதளம் மூலமாக கோடிக்கணக்கான தனி நபர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி இருக்கின்றார். அதோடு அவற்றை பலருக்கு விற்பனை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நாட்டில் 8 மெட்ரோ நகரங்கள் உட்பட 24 மாநிலங்களில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக திருடி அவற்றை விற்பனையும் செய்துள்ளார். இவரை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைபராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், காவல் துறையின் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கையில் 66.9 கோடி தனிநபர்கள் மற்றும் 104 பிரிவுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான தனிப்பட்ட ரகசிய தகவல்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அரசு ஊழியர்கள், பாதுகாப்பு துறை அதிகாரிகள், பான்கார்டு வைத்திருப்பவர்கள், 9 முதல் 12 வகுப்புகள் வரையில் படிக்கும் மாணவர்கள், நீட் தேர்வை எழுத காத்திருக்கும் மாணவர்கள், டெல்லி மின் வாரிய வாடிக்கையாளர்கள், டிமார்ட் கணக்கு வைத்திருப்பவர்கள் கோடீஸ்வரர்கள் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வைத்திருப்போர் என்று பல பிரிவுகளை சார்ந்தவர்களின் தனிப்பட்ட தகவல்களை இவர் திருடி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
விநாயக் பகத்வாஜை கைது செய்த தெலுங்கானா காவல்துறையினர் அவரிடம் விசாரணையை செய்து வருகின்றன. அவரிடம் இருந்த 2 கைபேசிகள், 2ம் மடிக்கணினிகள், அவர் திருடிய தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்து வைத்திருந்த கருவிகள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.