தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம், ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர லால் சலாம் மற்றும் ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என மேலும் இரண்டு படங்களை கைவசம் வைத்து உள்ளார். இப்படி பிஸியான நடிகராக வலம் வரும் ரஜினி, கடந்த சில தினங்களுக்கு முன் மும்பைக்கு சென்றிருந்தார். அங்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தொடங்கி இருக்கும் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது ரஜினியுடன் அவரது மகள் செளந்தர்யாவும் சென்றிருந்தார். மொத்தம் 4 அடுக்குகளில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நீடா அம்பானியின் கலாச்சார மையத்தில் 2,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட அரங்கம், ஸ்டூடியோ என ஏராளமான வசதிகளும் உள்ளன.
இந்த விழாவில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்துகொண்டது. இந்த பிரம்மாண்ட துவக்க விழாவில் கலந்துகொண்டது குறித்து நடிகர் ரஜினிகாந்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவின் முதல் முறையாக ஆடம்பரமான பிரம்மாண்ட கலையரங்கம் மும்பையில் கட்டப்பட்டுள்ளது. இதனை சாத்தியமாக்கிய என்னுடைய அருமை நண்பர் முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற அற்புதமான, தேசபக்தியுடனான மனதைக் கவரும் கலை நிகழ்ச்சிகளை நடத்திய நீதா அம்பானியை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. இதுபோன்ற ஒரு பிரம்மாண்டமான தியேட்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. விரைவில் அது நிறைவேறும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.