நோபால் மற்றும் வைடு வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வேறொரு கேப்டனின் தலைமையின் கீழ் தான் விளையாட நேரிடும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி கூலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 16ஆவது சீசன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 57, டெவான் கான்வே 47 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஷிவம் துபே 27, ராயுடு 27 (நாட் அவுட்), மொயீன் அலி 19, எம் எஸ் தோனி 12 ரன்கள் என்று வரிசையாக ஒவ்வொருவரும் ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அளவுக்கு அதிகமாக நோபால், வைடு என்று வீசிக் கொண்டே இருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 13 வைடு வீசியுள்ளனர். இதில், இம்ப்கேட் பிளேயரான துஷார் தேஷ்பாண்டே மட்டும் 4 வைடும், 3 நோபாலும் போட்டுள்ளார். இதையடுத்து, பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, பந்து வீச்சாளர்கள் அதிகமாகவே நோபால் மற்றும் வைடும் வீசினர். நோபால் வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளார்கள் பந்து வீசும் தரத்தை இன்னும் உயர்த்த வேண்டும். மைதானம், போட்டியின் தன்மைக்கு ஏற்ப பந்து வீசுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், நோபால் மற்றும் வைடு வீசுவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் வேறொரு கேப்டனின் தலைமையின் கீழ் தான் விளையாட நேரிடும் என்று தோனி கூலாக எச்சரித்தார்.